புத்தரும்…..

எங்க வீட்டு பிரிட்ஜும்

என் கணவருக்கு சென்னைக்கு மாற்றலான போது, அங்கே குடித்தனத்திற்கு தேவையான சில பொருட்கள் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு போனது. அதில் ஒன்றுதான் எங்கள் பிரிட்ஜ். எப்போவாவது இங்கு வரும்போது தானே தேவைப்படும், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு இருந்துட்டேன். அது எனக்கு ஒரு அவசியமான விஷயமாக தோணவில்லை. இங்கு அடிக்கடி வரவேண்டிய அவசியம் வந்தபோது தான் இந்த பிரிட்ஜை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம்னு தெரிஞ்சுது.

 

ஏறக்குறைய நம் பாட்டி வாழ்ந்த பழைய காலத்திற்கே திரும்பி போய்விட்டேன். எவ்வளவுதான் நம்ம கணவர், குழந்தைகள், எல்லோரும் ‘தினசரி இட்லி, இல்லைன்னா தோசை’ ன்னு முணுமுணுத்தாலும் அதை காதில் வாங்காமல் ஞாயிற்றுகிழமை தோசைக்கு அரைத்து திங்கள் கிழமை தோசை மாவை பிரிட்ஜ்க்குள் திணிக்கும் நம் பழக்கத்தை நம்மால் மாற்றிக்கொள்ள முடியாது. நானும் மாவை வைக்க பிரிட்ஜை தேடினால் அது இல்லை. அப்புறம் மேலே loft இல் இருந்த எங்க அம்மாவோட பெரிய பாத்திரத்தை எடுத்து தண்ணீர் ஊற்றி அதற்குள் மாவை உள்ளே வைத்து அந்த தண்ணியை தினமும் மாற்றி… போதும்….போதும்….

 

தயிருக்கும் இதே கதைதான்…ஆனாலும் புளித்துவிடும். குழந்தைகளுக்காக காலையில் உரை ஊற்றுவார்களே அந்த மாதிரி செய்து கொண்டிருந்தேன்.

 

மாவு ஓகே….தயிர் ஓகே….காய்கறி?…

உருளை கிழங்கு, வெங்காயம் எல்லாம் இந்த லிஸ்டில் இருந்து ஏற்கனவே தப்பித்தது.

கத்திரிகாய்….பிரிட்ஜுக்குள் வைத்தால் அதிலிருக்கும் சிறு புழுக்கள் இருப்பது தெரியாமல் போய்விடும், வைக்க கூடாதுன்னு எங்க அத்தை சொல்லுவாங்க….அப்ப ஓகே…கத்திரிக்காயும் தப்பித்தது.

வாழைக்காய்….என் மச்சாண்டார் வீட்டில் வாழைக்காயை உள்ளே வைப்பதை பார்த்து நானும் அப்படியே செய்து வந்தேன். இப்போ அதுவும் வெளியே….காலையில் எழுந்து பார்த்தால் அது வாழைப்பழம் ஆகியிருக்கும்…..Good….

அடுத்தது தக்காளி…..தக்காளி செடி போட்டிருந்தேன். தக்காளியாக காய்த்து கொட்டியது. வீட்டுக்கு வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லோருக்கும் தினமும் தக்காளி திருவிழாதான்…..ஒரு கட்டத்தில் முடியாமல், எல்லா தக்காளி செடியும்cut

தேங்காய் உடைத்தால், ஒரு பாதி உபயோகித்துவிட்டு மறு பாதி தண்ணீர் பாத்திரத்திற்குள்…..தேங்காய்க்கு எதுக்கு தண்ணீர் என்கிறீர்களா….எறும்புக்கு பயந்துதான்…..பிரிட்ஜ் என்பது எறும்பிடம் இருந்தும் நம் பொருட்களை பாதுகாக்கும் என்ற அரிய உண்மையை அப்போதான் கண்டுபிடிச்சேன்.

நல்லவேளை கருவேப்பிலையும் பச்சை மிளகாயும்செடியிலேயே இருந்ததால் அதற்கு பிரிட்ஜ் தேவைப்படவில்லை….

 

அப்புறம்soft drinks, squash, soya sauce, mayonnaise sauce, green chilli sauce, butter slices…எல்லாம் கட்….tomato ketchup, tamarind paste, ginger garlic paste எல்லாம் sachetதான்….

 

ஸ்வீட்ஸ் நிறைய இருந்தால் எல்லாம் பிரிட்ஜ் உள்ளே போகும். இப்போ டைனிங் டேபிளின் மேல். வீணா போகுதேன்னு சாப்பிட்டு சாப்பிட்டு வெயிட் போட்டதுதான் மிச்சம்.

 

அப்புறம் குழம்பு, கறி பழசு எல்லாம் எங்கே என்கிறீர்கள்….ஒரு குட்டி மண் சட்டி வாங்கி வந்து ஒரே சுண்டக்கறிதான். அது ஒரு தனி சுவைதான். எங்க பாட்டி ஞாபகம் வந்தது. நான் சாப்பிட்டேன். ஆனால் எங்க வீட்டு ரெகுலர் விசிட்டர் மிஸ்டர் காக்கா சாப்பிட மறுத்திட்டார்.

 

நான் எப்போ கோயம்புத்தூர் வருவேன்னு பார்த்துகிட்டே இருப்பாங்க போல, ஒரேguests…சும்மா வாக்கிங் போற பிரண்ட்ஸ் கூட வீட்டுக்குள் வந்து செல்வார்கள். அடிக்கடி பால் பாக்கெட் கொண்டு வரச்சொல்லி பக்கத்து கடைகாரப்பையன் என்னை பார்த்தாலே ஓடிவிடுகிறான். பிரிட்ஜ் இல்லாமல் இருக்கவே முடியாதா என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஏற்கனவே உள்ளதும் பழசாகி சரியாக வேலை செய்யாததால் புதுசு ஓன்று வாங்கிவிடுவோம் என்று முடிவு செய்து வாங்கியும் விட்டேன்.

 

ஒரு வாரம் முன்புதான் புது பிரிட்ஜ் வீட்டுக்கு வந்தது. இப்போ உலகத்தில் இருப்பது எல்லாம் அதற்குள்தான். எல்லாவற்றையும் அதற்குள் அடைத்த பிறகுதான் என்னால் நிம்மதியாக இருக்க முடிந்தது.

 

இப்போது உட்கார்ந்து யோசித்து பார்த்தால், சே என்ன வாழ்க்கை இது… ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்தே நான் புத்தரின் தீவிரfan

ஆசைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம்; ஆசையை அறவே ஒழி

என்று சொல்லி சென்றான் என் புத்தன்….

 

ஆனால் இன்று அழியக்கூடிய பொருட்களின் மேல் ஆசை வந்ததை நினைத்து என் மேலேயே எனக்கு கோபம்தான் வந்தது. யோசித்தால், புத்தரிடமே ஒரு குறை இருக்கிறது. வாழ்க்கையில் எங்கிருந்தோ திடீரென்று வரும் ஞானோதயங்கள் எல்லாம், எல்லாவற்றையும் அடைந்த பிறகுதானே வருகிறது….புத்தருக்கும் அப்படிதானே. அரசனாய் அணைத்தையும் அனுபவித்த பிறகுதானே ‘ஆசையை ஒழி’ என்றார்.

 

நம் மனது கூட எவ்வளவு சுயநலமாக, நமக்கு சாதகமாகவே யோசிக்கிறது. புத்தரையே விமரிசனம் செய்யும் அளவுக்கு போய்விடுகிறோம். தவறு….கருத்து சொல்கிறவரின் நிறை, குறைகளை ஆராய்வதை விடுத்து அவர் சொன்ன கருத்துகளை மட்டும் உட்வாங்குவோம். அதுதான் சிறந்த குணமும் கூட….இப்படி நான் சொன்ன கருத்தையும் கொஞ்சம் யோசிங்க….

 

நம்ம ஊர் பெண்கள்…..

பெண்கள்……ரொம்ப வித்தியாசமானவர்கள். எதையும் 90% குறுக்கு புத்தியுடன் தான் யோசிப்பார்கள்…அதுதாங்க Critical Reasoning.. இதையெல்லாம் நீங்க கேம்பஸ் இன்டர்வியூக்கோ ,CAT எக்ஸாமுக்கோ தான் இதை படிப்பீர்கள்…..படித்த பெண்களை விட படிக்காத பெண்களின் மூளை ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கும்.

தன் கணவரை எப்போதும் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிறைய காமெடி செய்வார்கள் வீட்டில். கல்யாணம் முடிந்து வரும் போதே ரொம்ப தெளிவா வருவாங்க. அவங்கம்மா நாலு தங்க வளையல் போட்டு அனுப்பிச்சா இவங்க கூட ஒரு நாலு கண்ணாடி வளையலையாவது வாங்கி மாட்டிக்குவாங்க….அப்போதானே வீட்டுக்காரர் பைக் ஸ்டார்ட் பண்ற சத்தத்தை மீறி இவங்க டாட்டா சொல்ற சத்தம் கேட்கும். இல்லேன்னா அவன் திரும்பிபார்க்காம போயிருவானே….

அவன் என்ன செய்வான்னா, அவனோட எல்லா பிரெண்ட்சையும் இவ கண்ணுலே காட்டமாட்டான். ஒண்ணு இவன் ஹிஸ்டரி அவன்கிட்டே இருக்கும், இல்லை இவன் பொண்டாட்டி கொஞ்சம் அழகா இருப்பாள். ஆனா அவ பயங்கர சமர்த்தியசாலியா இருப்பா. இவனோட அவ்வளவு பிரண்ட்ஸ் பேரையும் தெரிஞ்சி வச்சிருப்பா. எப்படின்னு எல்லாம் கேட்கக்கூடாது. வெள்ளிக்கிழமை ராத்திரி எவன் கூப்பிடுவான், சனிக்கிழமை எவன் கூப்பிடுவான்னு, எதுக்கு கூப்பிடுவான்னு அவளுக்கு தெரியும். அதனாலே கல்யாணமான நண்பர்களின் மனைவிகளின் செல் நம்பர் அத்தனையும் அவளுக்கு அத்துபடி. இவன் ஒருபக்கமும் எஸ்கேப் ஆகமுடியாம முழிப்பான்.

பிள்ளை பிறந்த பிறகு அடுத்த வஸ்திரத்தை உபயோகிப்பாள். அதுதாங்க, ‘அப்படியே உங்களையே உரிச்சி வச்சிருக்கான்’ என்பாள். இவன் அப்படியேflat. ஐயோ… பய புள்ள நம்ம செஞ்ச வித்தை எல்லாம் ஆரம்பிச்சிருவானோ என்று தினமும் பயந்து ஒழுங்கா பொறுப்பான அப்பனாகிவிடுவான். வேற வழி….

பிள்ளையை ஸ்கூல் சேர்த்த பிறகு, ரொம்ப தெளிவாகி, சும்மா தானே இருக்கேன், நிறைய செலவு இருக்கு, வேலைக்கு போறேனே என்பாள். கையில் ஒரு ஸ்கூட்டியுடன் சுதந்திரத்தையும் சேர்த்து வாங்கிக் கொள்வாள். இப்போ எக்னாமிக்களாகவும் அவகிட்டே சரண்டர் ஆகிடுவான். ஆல் அவுட்…….

அப்பாடா எவ்வளவு போராட்டம் ஒரு பெண்ணுக்கு……….ஒருத்தனை அடிமை ஆக்கிறதுக்குள்ள மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிடுது. இது வீட்டுக்காரருக்கு மட்டும்தான். மாமியார், மாமனார், நாத்தனார் இவங்களுக்கு எல்லாம் வேற வேற strategyயை பின்பற்றணும். என்ன பண்றது…. பொண்ணா பிறந்தாலே இப்படிதான் கஷ்டப்படணும்னு எங்க தலையில எழுதி இருக்கு……

.………இன்னும் எழுதுவேன்

பெண்கள் எத்தனை விதம் 1

உன் சின்ன விழியில்…

மலங்க மலங்க முழிக்கும்

உன் சின்ன விழியில்

என் விழி தெரியுதடி…..


தெருவில் அக்கா கைப்பிடித்து நடக்கும் போது

என்னை புறாவாக்கி, கடிதத்தை கையில் திணித்து

அத்தான் முன் என்னை தள்ளிய போதும்……


பள்ளிவிட்டு வரும் வழியில் குடித்த சுக்குக்காபிக்காக

வீட்டுவாசலில் காசு கேட்டு

கடைப்பையன் வந்து நின்ற போதும்…


தமிழ் வகுப்பில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து

சினிமா பாட்டுபாடி

டீச்சர் வாசலில் நிறுத்திய போதும்…


இறுக தலை வார காத்திருக்கும் அம்மா முன்

தலை நனைத்து

ஈரம் சொட்ட சொட்ட நின்ற போதும்…


அறை முழுவதும் காய வைத்திருக்கும் நெல்லை ஒதுக்கி,

மூலையில் கதை புத்தகத்துடன் ஒதுங்கி

சித்தியிடம் பிடிபட்ட போதும்….


காலேஜ் கட் அடித்து ஊர் சுற்றி

மினி டிராப்டரை தொலைத்துவிட்டு

அப்பா முன் நின்ற போதும்…


சேலையை யாரோ உடுத்தி கொடுக்க

மணமேடையில் தடுக்கி ஏறும் போதும்…


இப்படிதானே கண்ணே நானும் முழித்திருந்தேன்…


என் விழியின் கதைதானே கண்ணே

நாளை உன் விழியில்….

 

நம்ம ஊரு BSNL…..


நம்ம ஊரில இருக்கிற கவர்மென்ட் ஆபீஸ் பக்கம் கொஞ்சம் போனீங்கன்னா தெரியும், தினமும் வேலைக்கு போய்வருகிற அலுவலகத்தை ( அந்த ஆபிஸ் இப்போ மூணு மாசத்துக்கு முன்னாடிதான் நம்ம வரிப்பணத்தில கட்டினதா இருக்கும் ) எப்படி கேவலமாக வைத்திருப்பது, உட்கார்ந்திருக்கிற நாற்காலிக்கு பக்கத்தில் ஒரு மலை மாதிரி குவியலா, குப்பை மாதிரி பைல்களை எப்படி சேர்த்து வைக்கிறது, கரண்ட் போச்சுனா அதுலேருந்து ஒன்றை உருவி எப்படி விசிறியா பயன்படுத்திறது, வேலையே பார்க்காம, customer வந்ததைக் கூட கவனிக்காம எப்படி ஆபீசுக்குள்ளேயே சுத்துறது அப்படின்னு எல்லாம் நமக்கு சொல்லிக் கொடுப்பாங்க…


நம்ம ஊரு BSNL ஆபீசுக்கு போகிற நிலைமை எனக்கு வந்துச்சு….என்னன்னா….நான் ஒரு புது செல் வாங்கி அதுல என்னோட BSNL சிம் கார்டு ஒண்ணை போட்டேன். அதுக்கு இந்த GPRS, WAP, MMS…..இப்படிப்பட்ட விஷயத்தை எல்லாம் சேர்க்க வேண்டுமே. நானே நெட்லே இருந்து செட்டிங்க்ஸ் எல்லாம் சேர்த்துவிட்டேன். (http://forumz.in/174-cellone-excel-gprs-edge-settings-all-major-handsets/).


வேலை முடிஞ்சுதுன்னு பார்த்தா, மெயில் update ஆகுது ஆனா நெட் மட்டும் வேலை செய்யலை….நானும் settingsல APN எல்லாம் மாத்தி பார்த்தேன்…ஒண்ணும் வேலை செய்யலை…சரி நம்ம BSNL க்கு போன் பண்ணி கேட்டா அவங்க ஆபீசுக்கே கொண்டுவர சொன்னாங்க. நான் எங்க ஏரியாவில இருக்கிற ஆபீசுக்கு என் செல்லோட போனா அங்கே ஒரு பெரிய போர்டு என் கண்ணுல பட்டுது.





நம்ம வாய் சும்மா இருக்காதே….எங்க ஏரியா புதுசா உண்டானது, அதனால் BSNL landline connection இன்னும் இல்லை…இந்த போர்டை பார்த்ததும் அதை பற்றி கேட்டேன். கஸ்(ஷ்)டமர் கேரில் உட்கார்ந்திருந்த அந்த பெண்மணி ‘நீங்க முதலில் landline phone க்கு அப்பிளிக்கேஷன் கொடுங்க…நாங்க போன் கொண்டு வைப்போம். அப்புறம் வந்து நெட் (broadband) கனெக்ஷனுக்கு எழுதி கொடுங்க.’ சொன்னாங்க.


நான் அந்த போர்டை காமிச்சு broadband புக் பண்ணினா, நீங்க landline free ன்னு போட்டு இருக்கீங்களே…நான் அப்போ broadbandயே புக் பண்ணிக்கிறேனே’ என்று கேட்டேன்…அதுக்கு அவங்க ‘ஏங்க இதெல்லாம் இங்கே இல்ல…சென்னை, பெங்களுரூ மாதிரி பெரிய சிட்டிக்கு தான்’ அப்படின்னு சொன்னாங்க. நான் சும்மா இல்லாம, ‘அப்போ ஏன் இங்கே போர்ட் வச்சிருக்கீங்க…எடுத்திருங்க…’ என்று சொல்ல அவ்வளவுதான் என்னை முறைச்சு பார்த்து, ‘உங்களுக்கு என்ன வேணும்’ ன்னு கேட்டாங்க….ஐயோ நம்ம வந்த மேட்டரை மறந்திட்டோமேன்னு அதை சொன்னேன். ஏற்கனவே இருந்த கடுப்பில இங்கே எல்லாம் அதை பார்க்க முடியாது. கலெக்டர் ஆபிஸ் பக்கத்தில இருக்கிற எங்க ஆபிஸ் போய் கேளுங்கன்னு சொல்லிட்டாங்க….வேற வழி….இதுதான் வாய் கொழுப்பு….


சரின்னு அங்கே போய், முன்னாடி உட்கார்ந்திருந்தவரிடம் கேட்டால், ‘அந்தா இருக்காரே ஒரு ப்ளூ கலர் சட்டை போட்டுக்கிட்டு அவர்கிட்டே கேளுங்க’…ஓகே…அங்கே போயாச்சு….


அவர், ‘அதோ அங்கே ஓயிட் சுடிதார் போட்டிருக்காங்களே அவங்களை கேளுங்க’ என்றார்….ஓகே…அங்கேயும் போயாச்சு…


அந்த அம்மா,’ உட்காருங்க, ஒரு ஐந்து நிமிடம்…’ என்று இங்கேயும் அங்கேயுமாக நடக்க போய்ட்டாங்க. அப்புறம் வந்து விஷயத்தை கேட்டுவிட்டு, ‘அந்த கிரீன் சாரி கட்டி இருக்காங்களே அவங்க கிட்டே போங்க’…போயாச்சு….இப்படியே ஒரு அரை மணி நேரமும் போயாச்சு….


அடுத்தது ஒரு ரெட் ஷர்ட் போட்டவர்….அவர் மேஜை முன் அமர்ந்தேன். அவர் இன்னொருவருக்கு ஏதோ சொல்லி கொண்டிருந்தார். என்னிடம் விஷயம் கேட்டு வெயிட் பண்ண சொன்னார். ஒரு பத்து நிமிடம் காவல். நான் அதற்குள் என் செல்லில் மறுபடியும் APN எல்லாம் மாற்றி பார்த்து கொண்டிருந்தேன்….


என்ன ஒரு ஆச்சரியம்…நெட் வேலை செய்தது…..ஆஹா…BSNL ஆபிசுக்குள் வந்தால் தான் அவங்க நெட்வொர்க் வேலை செய்யும் போல…..அவர்கிட்டே சொன்னேன்….’கரெக்ட் ஆகிடுச்சா….’ அவருக்கு ஒரே சந்தோசம். நம்ம கை வைக்காமலே நம்ம நெட்வொர்க் வேலை செய்யுதே, நம்ம ஆபிஸ் ராசி என்று….நல்ல வேளை….என்ன செய்து சரி பண்ணுனீங்கன்னு என் கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்காம விட்டாங்களே, அதுவரைக்கும் ஓகே தான். ஓடியே வந்துட்டேன்….. 


Disc :

இது வெறும் என்னோட அனுபவம் தான். அதுக்காக நம்ம BSNL ஆபிசுல இருப்பவங்க எல்லாம் இப்படித்தான்னு நீங்க யாரும் முடிவுக்கு வந்திடக்கூடாது…..

BSNL Logoவை பாருங்க….Indiaவையே Connect பன்றாங்க…பார்த்து…escape…..  


 

பாரதி உன் மேல்……

எனக்கு கோபம்…..

பாரதி உன் மேல் எனக்கு கோபம்
நீ தானே பெண்ணை படிக்க சொன்னாய்
நீ தானே குடும்பத்தை உயர்த்த சொன்னாய்
நீ தானே சமுதாயத்தை முன்னேற்ற சொன்னாய்


படிக்கும் போது அவள் பெண் பிள்ளை
குடும்பத்தை உயர்த்தும் போது அவள் பெண் தெய்வம்
சமுதாயத்தை உயர்த்த போனாலே அவள் பெண்ணல்ல
பேதையான மாதவி……
குற்றம் சாட்டப்படுவது பெண்தான்
சாட்டுவதும் பெண்தான்….

கைப்பையுடன் வேலைக்கு போய்

கவலையுடன் திரும்பும் பெண்ணை
கைக்காட்டி சிரிக்கும் கூட்டம்
ஆண் மட்டுமில்லை பாரதி…பெண்ணும்தான்….

ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதானே

இந்த சமூக கூட்டம்
தோழனாய் தோழியாய்
சகோதரனாய் சகோதரியாய்
சாதாரணமாய் பார்க்காத சிந்திக்காத
புறம் பேசும் பெண்களின்
புண்படுத்தும் பேச்சுகள்…
இழிவான இந்த பெண்களின் இகழ்ச்சிக்கு பயந்து
மாய்ந்து போன பெண்களை தெரியுமா பாரதி உனக்கு?

உன் கனல் கக்கும் சாட்டையடியால்
ஆண்களிடம் இருந்து எங்களை சற்று நிமிர செய்தாய்
இன்று நீ இருந்தால் இப்படி பேசும் பெண்களை
என் செய்வாய் சொல்….

வேண்டாம் பாரதி,
நீ மறுபடியும் வேண்டாம்…..

நீ மறுபடியும் பிறந்து வந்தால்

உன் கவிதைகள் செல்லுபடியாகாது;நீ ஆவாய்…..
உன்னையும் ‘புதியதோர் கவிஞன் செய்வோமென்று’
தொலைகாட்சியில் உலா விட்டுவிடுவார்கள்……
லிப்ஸ்டிக் போட்டு அமர்ந்திருப்பவர்கள் எல்லாம்
‘உன் கவிதை சரியில்லை, உனக்கு எழுத தெரியவில்லை’ என்பார்கள்…..
மகாகவி பாரதியை வெறும் பாரதியாக்கிவிடுவார்கள்….

அதனால் வேண்டாம்…..
நீ மறுபடியும் வேண்டாம்
இச்சமுகத்துக்கு……

பெண்கள் எத்தனை விதம்……

பெண்களில் தான் எத்தனை விதம்… சில பெண்கள் குடும்பத்திற்காக மட்டும் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்திருப்பார்கள். ஆனா உருவம் மட்டும் குண்டு பூசணிக்காயாக மாறியிருக்கும். சிலர் தன்னை மட்டுமே அழகு படுத்திக் கொண்டு, ஒரு வேலையும் செய்யாமல், சமையல் செய்ய சமையல்கார அம்மா , வீடு பெருக்க, துடைக்க, பாத்திரம் கழுவ என்ற ஒவ்வொன்றுக்கும் வேலைக்காரி, பிள்ளைகளை கார் டிரைவர் வைத்து வளர்ப்பார்கள். சில பெண்கள் மட்டும் தான் தன்னையும் பார்த்து கொண்டு வீட்டுக்காகவும் உழைப்பார்கள்.
 
நேற்று சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு திரும்பிக் கொண்டிருந்தேன் சேரன் எக்ஸ்பிரஸில். ஏறும்போதே என் இருக்கைக்கு அருகில் யார் இருக்கிறார்கள் என்று chartல் பார்த்துவிட்டுதான் ஏறுவது என் வழக்கம். பார்த்ததில் ஒரு வயதான தம்பதியரும் (வயது 72, 67) அடக்கம். அவர்களின் மூன்று வயதுடைய பேத்தியும் உடன் இருந்தாள்.
 
அவர்களின் இருக்கையின் எதிரில் ஒரு பெண்ணும் அவளுடைய இரு குழந்தைகளும் இருந்தனர். அந்த இரண்டாவது பையன் இந்த குழந்தையுடன் விளையாட முயற்சி பண்ணும போதெல்லாம் இந்த வயதான பெண்மணி ‘make them sleep‘ ன்னு சொல்லிக் கொண்டே இருந்தார்….தன் பேத்தியை தூங்கவும் வைத்துவிட்டார். தன் பேத்தியை பத்திரப்படுத்துவதில் அவ்வளவு கவனம்.
 
காலையில் இறங்கும் முன் சற்று நேரம் உட்கார்ந்திருந்த போது மேல் பெர்த்தில் படுத்திருந்த ஒரு இளைஞனும் இறங்கி வந்து இந்த பெண்மணியின் அருகில் அமர்ந்தான். உடனே அந்த வயதான அம்மா தன் கற்பே பறி போன மாதிரி ‘என்ன இப்படி பக்கத்தில் எருமைமாடு மாதிரி உரசிக்கிட்டு உட்காரே…தள்ளி போய் உட்காரு’ என்று சத்தம் போட்டார்….வீட்டிலே அந்த வயதான மனிதரின் நிலைமையும் இதுதான் போல….அவர் எத்தனை வருஷமாகுதோ இந்த அம்மாவை எதிர்த்து பேசி…..
 
இந்த மாதிரி பெண்மணிகளை என்னவென்று சொல்வது….இந்த அம்மாகிட்ட மாட்டின மருமகள் எல்லாம் என்ன பாடுபட்டுக்கிட்டு இருப்பாங்கன்னு என்னாலே யோசிக்கவே முடியலை…..பாவம் தான் அந்த பெண்கள்…
 
 
இப்படி சில பெண்கள் என்றால், Airtel Super Singer Junior நிகழ்ச்சியில் வரும் அம்மாக்களை பார்த்தால்,சகித்துக்கொள்ள முடியவில்லை……தன் விடலை பிள்ளைகளுக்கு சல்லடை மாதிரி ஆடைகளை போட்டுவிட்டு, பதினோரு வயது பெண்பிள்ளையை பதினாறு வயது பருவ மங்கையாக்கி, டிவியில் பாடவிட்டு, ஆடவிட்டு தானும் சேர்ந்து ஆடி, அவர்கள் கெட்டு போக தாயே துணை போகும் அவலம் இங்கு தான் நடக்கிறது. எப்படி இவர்களின் கணவன்மார்கள் இவர்களுடன் குடித்தனம் நடத்துகிறார்கள்? அது சரி… இவள் ஒரு பக்கம் இப்படி போனால் தானே, அவன் வேறு பக்கம் போக முடியும்……இந்த மாதிரி சீர்கேடுகளை பெண்கள் சற்று குறைக்கலாமே…..நீங்கள் ஒழுக்கமாக இருந்தால் தான் உங்களின் பெண் குழந்தைகளும் ஒழுக்கமாக வளருவார்கள். 
 
முன்பு எல்லாம் அம்மா கண்டிப்பாகவும், அப்பா செல்லமாகவும் பெண் குழந்தைகளை வளர்ப்பார்கள். இப்போது அப்படி இல்லை. இருவருமே செல்லம கொடுக்கிறார்கள். தப்பில்லை….ஆனால் சற்று கண்டிப்பும், யாராவது ஒருவருக்கு பயமும் இருக்க வேண்டும். கடைக்கு போனால்  உங்கள் பெண்ணிற்கு, கண்ணில்படும் டிரஸ், உங்களை உங்கள் அம்மா போடவிடாமல் செய்த டிரஸ் எல்லாம் எடுத்து கொடுக்காதீர்கள் அவளுக்கு. உங்கள் பெண் உங்களுக்கு என்றுமே குழந்தைதான். மற்றவர் கண்களுக்கு அவள் என்றுமே அழகுபதுமைதான். சின்ன வயதில் ‘பொம்மை மாதிரி இருக்கா’ என்பார்கள். விடலை பருவத்தில் ‘சிக்குனு இருக்கா’ ன்னு நினைப்பாங்க. காலேஜ் போகும் போது ‘பிகர்’ ஆக்கிருவாங்க……கவனம் தேவை….

உழைக்கும் வர்க்கமும்…

உட்கார்ந்து சாப்பிடற வர்க்கமும்……

நேற்று எங்கள் பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்றிருந்தேன். நான்கு மாதங்களாக ஆர்.டி(RD) கட்டாததால் மொத்தமாக ஒரு ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றையும் ஆர்.டி கட்ட வேண்டி எழுதிய சிலிப்பையும் ஆர்.டி புத்தகத்துக்குள் வைத்து கையில், வெளியே தெரியும்படி வைத்திருந்தேன். திங்கள் கிழமை ஆதலால் ஐந்து பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்…எங்கள் பகுதியில் இதுவே பெரிய கூட்டம். இல்லை என்றால் ஈ ஆடிக்கொண்டிருக்கும் எங்கள் தபால் நிலையம்.

நான் நான்காவதாக நின்றுகொண்டிருந்தேன். எனக்கு முன் நின்றிருந்த பெண்மணி என்னை ஏற இறங்க பார்த்து விட்டு என் சுடி எங்கே எடுத்தேன், எவ்வளவு ஆச்சு, தைக்க என்ன ஆச்சு, லைனிங் கொடுத்திருக்கிறேனா என்றெல்லாம் விசாரித்து கொண்டிருந்தார்.

அப்போது தான் அந்த பெண்மணி அவசரமாக உள்ளே வந்தாள். கையில் ஒரு form வைத்திருந்தாள். யாராவது கிடைப்பார்களா எழுதி கொடுக்க என்பது அவள் பார்வையில் இருந்தே புரிந்தது. யாரும் திரும்பவில்லை. நான் அவளை பார்க்கவும் என்னிடம் நீட்டினாள்.

அட்ரஸ் எழுதி இருந்த ஒரு துண்டு தாளையும் நீட்டினாள். தன் பையன் ITI படித்து கொண்டிருப்பதாகவும் அவனுக்கு தான் ஐந்நூறு ரூபாய் பணம் அனுப்புவதாகவும் கூறிக்கொண்டிருந்தாள். எல்லாம் எழுதி கொடுத்தேன். ‘செல்வி’ என்ற தன் பெயரை கூட யாரோ சொல்லி கொடுத்த விதத்தில்தான் கையெழுத்து போட்டாள். நான் க்யுவுக்கு திரும்பும் போது இன்னொரு பெண்மணியும் அதில் சேர்ந்திருந்தார். அவருக்கு பின் போய் நின்று கொண்டேன்.

ஏற்கனவே நின்று கொண்டிருந்த பெண்மணி என்னிடம் திரும்பி ‘என்னங்க உங்க RD புக்குள்ளே ஆயிரம் ரூபாய் இருக்கா…பார்த்துக்கோங்க…’ என்றார். பார்த்து விட்டு ‘இருக்கே….ஏன் ? ‘ என்றேன்.

‘இவ என் பக்கத்து வீட்டில் தான் வேலை செய்கிறாள். அவ பார்வையே சரி கிடையாது. அதனால் நான் அவளை வேலைக்கு நான் வைத்து கொள்ளவில்லை. அதுதான் உங்களிடம் பணத்தை சரி பார்க்க சொன்னேன்’ என்றார். 

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் நான் கையில் வைத்திருந்த rd புக்கையோ பணத்தையோ அந்த வேலைக்கார பெண் கவனிக்கவில்லை. அவள் கவலை பணத்தை அனுப்புவதிலும் கொடுத்து விட்டு திருப்பி வேளை செய்ய ஒடுவதிலும் தான் இருந்தது. ஆனால் குறை சொல்லிய பெண்மணியின் கவனமோ என் உடை, என் கையில் இருந்த பணம் இதில் தான் இருந்திருக்கிறது. 


Idle Mind is a Devil’s Workshop‘ சும்மாவா சொல்லியிருக்காங்க…..


உழைக்கிற வர்க்கம் எவ்வளவோ மேல், உட்கார்ந்து சாப்பிடற வர்க்கத்தை விட….



சுமையும் வலியும்…..

அமரும் பட்டாம்பூச்சியால்

பூவுக்கு சுமையில்லை….

ஆங்காரமாய் ஓடும் ஆற்றினால்

நாணலுக்கு வலியில்லை….

ஆயிரம் கோடி மாந்தரால்

பூமிக்கு வலியில்லை….

சுகிக்கும் ஆண்

பெண்ணுக்கு சுமையில்லை….

உயிர் கொடுக்கும் தாய்க்கு

மகவு சுமையில்லை….

வலிகளால் ஆன வாழ்க்கை  

மனிதனுக்கு சுமையில்லை…. 


காணாமல் போன என் தனிமை…..

என்னுடனே

உண்டு உறங்கி

பேசி பழகி

பாட்டு பாடி

படம் பார்த்து


என்னுடனே

நடந்து வந்து -சில சமயங்களில்

என்னையே ஆழம் பார்த்து

என் துணையாய் இருந்த

என் தனிமையை தொலைத்துவிட்டேன்….


என் செவிகளில் விழும்

சல சல பேச்சுகளில்

என் தனிமையை தேடுகிறேன்….


அமைதியை கூட வைத்தே இருந்தேன்

அதையும் காணவில்லை….

பேசிக்கொண்டே இருக்கும் உறவுகளுக்கு இடையில்

பேசாமலே என்னை விட்டு நீ போனதெங்கே?


கல்யாண வீடுகளில்

கடைத் தெருக்களில்

வாகன இரைச்சல்களில் 

சினிமா தியேட்டர்களில் -எங்குமே

உன்னை நான் தொலைத்ததில்லையே

என் மனதின் நண்பன் நீ

என் நிழலும் நிஜமும் நீ

என்னுடன் நீ இல்லாமல்

நான் நானாக இல்லை

என்றுதான் திரும்பி என்னிடம் வருவாய்

தொலைந்தது நீயா அல்லது நானா…

ஞாபகத்தின் பின்னல்கள்…

ஞாபகத்தின் பின்னல்கள்

சுழற்சி முறையில் வந்து போகும் மனிதர்கள்

சுற்றும் கடிகாரத்தில்

சுகமான கனவு முட்கள்

மனதின் மூலையில்

மறைந்த மனித முகங்கள்

யாசித்த வாசகத்தில்

சுவாசத்தின் உயிர் மூச்சுகள்

நான் என்றும் நீ என்றும் இருக்கிறதா….

எதுவும் இல்லாத நிலை என்றும் இருக்கிறதா….

இல்லாத நிலையில் உயிர் உலவுகிறதா….

இருக்கும் நிலையில் மட்டும் ஏதாவது இருக்கிறதா….

புதிரான இந்த உலகில் புரியாத பார்வைகள்

மெய் என்றும் பொய் என்றும் இரு வேறு அர்த்தங்கள்

ஏற்பதா வேண்டாமா என்று சஞ்சலங்கள்

முடிவில் தோற்கும் நம் மனக்குதிரைகள்…..