பிரிவுகள்
உறவுகள் உளவியல் சமுகம் புத்தகம் மனம்

காட்டிடைவெளி (மின் புத்தகம்) EBook

காட்டிடைவெளி (மின் புத்தகம்)

ஆசிரியர் : அகிலா 

காட்டிடைவெளி என்னும் இந்த புத்தகம், ஒரு மனதின் பயணம். நாம் நடந்துக் கொண்டே இருக்கும்போது, நம் மனமும் அதற்கான ஒரு பாதையில் நடக்கத்தொடங்கும். அதன் சுவாரசியங்கள், விருப்பங்கள், புன்னகைகள், அழுகை எல்லாம் தனி. அவற்றை எல்லாம் இந்த புத்தகத்தில் வாசிக்கலாம். 

இந்த புத்தகம் கொரோனா காலத்தில் வெளிவருகிறது. என்னுடைய ‘தவ்வை’ நாவல், ‘இங்கிலாந்தில் 100 நாட்கள்’ பயண இலக்கியம் இவை அச்சில் ஏறியபிறகு, என் கையிருப்பு இன்னொரு புத்தகத்தை அச்சில் ஏற்ற முடியாத சூழலில், மனம் நோக்கிய பயணத்தை எழுதிய இப்புத்தகம் அமேசான் கிண்டிலில் (Amazon Kindle) வெளிவருகிறது. 

விலை : ரூ 80 

அமேசான் அன்லிமிடெட் ஆப்ஷனில் நீங்கள் இருந்தால் இலவசமாக வாசித்துக் கொள்ளலாம். 

புத்தகத்தின் என்னுரையில் இருந்து சில துளிகள் இங்கே உங்களுக்கு..   

வனாந்திரத்தின் ஊடான அடர்த்தியில் நடப்பது கடினமும் இயல்பானதும் ஆகும். கடினம் எவ்வாறு இயல்பானது ஆகும்? பாதைகள் ஒழுங்கற்று, பயம் சூழ்ந்து, எங்கு இட்டுச்செல்லும் என்பதறியா உணர்வு நடப்பதைக் கடினப்படுத்தும். ஆனால் வியாபித்திருக்கும் காடு நம் உள்ளிருக்கும் மரபணுக்களின் உயிர்மம் ‘நீ காட்டிலிருந்து வந்தவன்’ என இயல்பாக்கும். மனதின் உணர்வும் உடலின் உயிர்மமும் சேர வாய்த்தவன் மனிதன். கடினமும் இயல்புமாய் வனாந்திரத்தின் வாழ்வைச் சுமந்துக்கொண்டு நடக்கிறேன்.  

நடத்தல் என் இயல்பான செயல். பெருவிருப்பமும் கூட. என்னுடைய உள் மனதின் அலைகளுடன் கைக்கோர்த்துக்கொண்டே உலாவுதல் சுகம். தனியாகவே நடக்க விழைவேன் நான். யாரேனும் உடன் வந்தால் என் எண்ண ஓட்டங்களில் குறுக்கீடுகள் இருக்கும்; சமரசம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்தும்; என் தனிப்பட்ட நேரத்தை காயப்படுத்திச் செல்லும். தனியே நடத்தல் நம் சுயம் சாகாமல் உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.

 வழக்கமான பாதையாய் இருந்தாலும் மனம் மட்டும் ஒரு வனாந்திரப் பயணத்தை மேற்கொள்ளும். ஒத்தையடி பாதைகளில்லா தடம் அது. பெயர் அறியா பறவைகளின் குரலுக்குள் யாரையும் தேடவியலா சுகம் அது. நடக்கும் காலின் தொடக்கம் வரை, வளர்ந்து நிற்கும் புற்களைத் தழுவும் கைகளில் உராயும், பச்சயம் அது. பாதை தேடி அலைந்து சலித்து சட்டென திறக்கும் வெட்டவெளியில் முகமும் மனமும் ஒருசேர ஆசுவாசப்படும் பொழுதைச் சுமக்கும் சமன்தான் காட்டிடைவெளி. காட்டின் இடையில் அது புல்வெளி சுமந்த தளம்; சூரியனை வெளிச்சப்படுத்தும் ஆசுவாசம்; அவ்விடத்தின் அடிபுற்களின் வாசம் என் சுவாசமாகும். அந்த காட்டிடைவெளியே இந்த புத்தகமும்.

 காடாய் கிடக்கும் மனதிற்கு சிறிது வெளிச்சமும் வெளியும் ஆறுதல்படுத்தும் சுகம் பேரழகு தானே. எனக்கும் சரி, உங்களுக்கும் சரி, நடந்துக்கொண்டே சுவாசிக்க இனி இந்த காட்டிடைவெளி போதும். நடையின் இடையில் இளைப்பாறும் சமயம், தனியிடம் அமர்ந்து வாசிக்கத்தொடங்கலாம்.

லிங்க் : காட்டிடைவெளி 

வாசித்து சொல்லலாம்.. உங்க கருத்தை.. 


அகிலா..